இளைஞர் மரணம் - வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவு.!
Author
gowtham
Date Published

சென்னை :சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் நடந்த சம்பவத்தில், கோவில் தற்காலிக ஊழியரான அஜித்குமார் (வயது 24) என்பவர் காவல்துறை விசாரணையின்போது உயிரிழந்தார்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக, காவல்துறையினரால் அஜித்குமார் தாக்கப்பட்டதாகவும், இதனால் அவர் உயிரிழந்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த சம்பவம் காவல்துறையின் செயல்பாடுகள் மீது பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இந்த விவகாரம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. மேலும் வெளிப்படையான மற்றும் நியாயமான விசாரணைக்கு கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன.
சாதாரண வழக்கில் கைது செய்யப்பட்டவரிடம் எந்த ஆயுதமும் இல்லாத நிலையில், தாக்கியது ஏன் என அஜித்குமார் வழக்கில் ஐகோர்ட் மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது. அடித்துக் கொல்லப்பட்டவர் என்ன தீவிரவாதியா எனவும் 24 லாக்கப் மரணங்கள் நடைபெற்றுள்ளதாக கூறப்படுவது குறித்து அரசு தரப்பு விளக்கம் என்ன என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இந்த வழக்கு தமிழக அரசுக்கு புதிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது, இந்த வழக்கு தொடர்பாக வெளிப்படையான விசாரணை உறுதிசெய்ய, தமிழக டி.ஜி.பி. சங்கர் ஜிவால், இந்த வழக்கை சிபிசிஐடி (CBCID) விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டார். மேலும், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஆறு காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். வழக்கு தொடர்பாக மாஜிஸ்ட்ரேட் விசாரணையும் நடைபெற உள்ளது.