"புதிய கல்விக் கொள்கையை ஏற்கும் வரை கல்வி நிதி தர முடியாது"- மத்திய அமைச்சர் திட்டவட்டம்.!
Author
gowtham
Date Published

உத்தரப் பிரதேசம்:வாரணாசியில் இன்று காசி தமிழ் சங்கமத்தின் மூன்றாவது பகுதி நடைபெற்றது. இதில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை இணையமைச்சர் எல்.முருகன் ஆகியோர் கலந்த கொண்டனர்.
அப்பொழுது, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானிடம் தமிழகத்திற்கு வர வேண்டிய கல்வி நிதி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த தர்மேந்திர பிரதான், "நிதி நிலுவையில் இருப்பது எனக்கு நன்றாகவே தெரியும். தமிழ்நாடு அரசு, அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டால் நிதி விடுவிக்கப்படும்" என்றார்.
முன்னதாக, தமிழகத்திற்கு வர வேண்டிய ரூ.2,152 கோடியை மத்திய அரசு வேறு மாநிலங்களுக்கு கொடுத்து விட்டதாக முதல்வர் ஸ்டாலின் குற்றம்சாட்டியிருந்தார். இந்நிலையில், இது குறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய தர்மேந்திர பிரதான், அரசியல் காரணங்களுக்காக தமிழகம் மும்மொழிக் கொள்கையை மறுப்பதாகக் கூறினார்.
"தேசிய கல்விக்கொள்கையை தமிழக அரசு ஏற்றுக்கொண்டால்தான் நிதி விடுவிக்கப்படும். ஏற்காத பட்சத்தில் 2 ஆயிரம் கோடி ரூபாயை விடுவிக்க சட்டத்தில் இடமில்லை. அரசியல் காரணங்களுக்காகவே தேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு எதிர்க்கிறது"என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "உலகமே மாறி வரும் சூழலில் மும்மொழிக் கொள்கையை தமிழக அரசு ஏன் ஏற்க மறுக்கிறது? உள்ளூர் மொழிக்கே முதலிடம் என்ற தேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு எதிர்க்கிறதா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.