நடிகை வழக்கில் தொண்டர்கள் திரள் நடுவில் காவல் நிலையத்தில் சீமான் ஆஜர்!
Author
manikandan
Date Published

சென்னை :நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரின் பெயரில் பதியப்பட்ட வழக்குகளை முடித்து வைக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் சீமான் தரப்பு மனு அளித்து இருந்தது. இந்த வழக்கில் விசாரணையை தீவிரப்படுத்த நீதிபதி அளித்த உத்தரவின் பெயரில் வளசரவாக்கம் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.
இதுதொடர்பாக வளசரவாக்கம் போலீசார், சென்னை நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டில் விசாரணைக்கான சம்மனை ஒட்டினர். அதனை சீமான் வீட்டில் இருந்த நபர் கிழித்து விட்டார். இதுதொடர்பாக விசாரிக்க போலீசார் சென்ற போது பாதுகாவலர் அமல்ராஜ் என்பவர் போலீசாரிடம் துப்பாக்கி கட்டியதாக கூறப்பட்டு அவரை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில் நேற்று வழங்கப்பட்ட போலீசார் சம்மனில், நடிகை வழக்கு தொடர்பாக வளசரவாக்கம் காவல் நிலையத்திற்கு இன்று நேரில் ஆஜராக வேண்டும் என கூறப்பட்டிருந்தது. அதன்படி, தற்போது வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராக்குவதற்கு சீமான் வளசரவாக்கம் காவல் நிலையம் வந்துள்ளார்.
சீமான் நேரில் ஆஜராகுவது தெரிந்த நாம் தமிழர் கட்சியினர் வளசரவாக்கம் காவல் நிலையம் பகுதி முழுக்க குவிந்துள்ளனர். பாதுகாப்பு கருதி கூடுதல் போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். சீமானிடம் போலீசார் 50க்கும் மேற்பட்ட கேள்விகளை கேட்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இரவு 9.15க்கு வளசரவாக்கம் காவல் நிலையம் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சீமான், 10 மணிக்கு நேரில் ஆஜராகினார். ஆயிரக்கணக்கான நாம் தமிழர் கட்சியினர் வளசரவாக்கம் காவல் நிலையத்தை சூழ்ந்துள்ளதால் அங்கு பரபரப்பான சூழல் நிலவுகுகிறது.
நேரில் ஆஜரான சீமானிடம் கோயம்பேடு காவல் இணை ஆணையர் அதிவீரபாண்டியன்,வளசரவாக்கம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் செம்பேடு பாபு ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.