தடை செய்தாலும் மீண்டும் வருவோம்.! பெயரை மாற்றி சேவையை தொடரும் ரேபிடோ – உபர்.!
Author
Rohini
Date Published
கர்நாடகா : போக்குவரத்து நெரிசல் மிகுந்த பெங்களூரு உட்பட, இந்தியாவின் முக்கிய நகரங்களில் விரைவான மற்றும் மலிவு விலையில் பைக் டாக்ஸி சவாரிகளை வழங்குவதில் ஒரு காலத்தில் பிரபலமான ரேபிடோ, பாதுகாப்பு மற்றும் உரிமம் தொடர்பான கவலைகள் காரணமாக ஒழுங்குமுறை விமர்சனத்திற்கு உள்ளானது.
இதனை தொடர்ந்து, பெங்களூரு உள்பட கர்நாடகா முழுவதும் பைக் டாக்ஸிகளுக்கு விதிக்கப்பட்ட தடை நேற்றுடன் (ஜூன் 16) முடிவுக்கு வந்தது. இந்நிலையில், Uber நிறுவனம் ‘Moto’ என்ற பைக் டாக்ஸி சேவையை ‘Moto Courier’ என்று மாற்றியுள்ளது. அதேபோல், Rapido நிறுவனம் ‘Bike’ என்பதை ‘Bike Parcel’ என மாற்றியுள்ளது.
இந்தப் பெயரின் மூலம் பார்சல்கள் பைக்கில் அனுப்பப்படுவது என்றாலும், வழக்கம்போல் பைக் டாக்ஸியாக செயல்படுவதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக ஸ்கிரீன்ஷாட்களை பகிர்ந்து, ‘இனி நம்மை நாமே பார்சல் செய்து அனுப்பிக்கொள்ளலாம் போல’ என பெங்களூரு இணையவாசிகள் விமர்சனம் செய்து வருகிறார்கள்.
இந்த மறுபெயரிடப்பட்ட ரேபிடோ – உபரின் சேவைகள் விதிமுறைகளுக்கு இணங்குகின்றனவா அல்லது நீதிமன்றத்தின் தீர்ப்பின் நோக்கத்தை மீறுகின்றனவா என்பது குறித்து கர்நாடக அரசு இதுவரை முறையான பதிலை தெரிவிக்கவில்லை.