அன்புமணி நடைப்பயணத்துக்கு தடை கோரி ராமதாஸ் மீண்டும் மனு.!
Author
gowtham
Date Published

சென்னை :உரிமை மீட்க தலைமுறை காக்க நடைப்பயணம் என்ற பிரச்சார பயணத்தை ஜூலை 25ல் அன்புமணி தொடங்கினார். ஆனால், அன்புமணி பயணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த ராமதாஸ், அனுமதி தரக்கூடாது என டிஜிபிக்கு மனு அளித்தார்.
முன்னதாக, ராமதாஸ் தரப்பு இதே கோரிக்கையுடன் டிஜிபி அலுவலகத்தில் மனு அளித்திருந்தது, ஆனால் அன்புமணி தரப்பு இந்த பயணத்திற்கு தடை இல்லை எனவும், திட்டமிட்டபடி நடைபயணம் தொடரும் எனவும் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், மீண்டும் பாமக நிறுவனர் ராமதாஸ், அவரது மகன் அன்புமணி ராமதாஸ் அனுமதி பெறாமல் நடைபயணம் மேற்கொண்டதாகக் கூறி, தமிழக உள்துறை செயலருக்கு கடிதம் எழுதியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.உள்துறை செயலருக்கு ராமதாஸ் அனுப்பிய கடிதத்தில் டிஜிபியின் உத்தரவு நகலும் இணைக்கப்பட்டுள்ளது.
அந்த கடிதத்தில், ''கட்சி நிறுவனரின் ஒப்புதல் இல்லாமல் அன்புமணி நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். அன்புமணியின் நடைபயணத்தால் கட்சி நிர்வாகிகளுக்குள் குழப்பமும், மோதலும் ஏற்படுகிறது'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
குறிப்பாக தலைவர் பதவி தொடர்பாக இருவரும் தேர்தல் ஆணையத்தை அணுகியுள்ள நிலையில், இந்த விவகாரம் பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே நீடிக்கும் உட்கட்சி மோதலின் ஒரு பகுதியாகவே பார்க்கப்படுகிறது.