Payload Logo
இந்தியா

ஆபரேஷன் சிந்தூர் விவாதம் : இன்று மாலை பிரதமர் மோடி உரை?

Author

bala

Date Published

narendra modi in parliament

புதுடெல்லி :ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து மக்களவையில் இன்று (ஜூலை 29) பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏப்ரல் 22, 2025 அன்று ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் 26 பொதுமக்கள் உயிரிழந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ஆயுதப்படைகள் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (PoJK) பயங்கரவாத உள்கட்டமைப்புகளை துல்லியமாக தாக்கி அழித்த ஆபரேஷன் சிந்தூர் குறித்து மக்களவையில் நேற்று (ஜூலை 28) 16 மணி நேர விவாதம் நடைபெற்றது.

இதில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், “இந்த நடவடிக்கை 22 நிமிடங்களில் வெற்றிகரமாக முடிக்கப்பட்டது,” என்று கூறி, இந்திய ஆயுதப்படைகளின் துணிச்சலை பாராட்டினார். வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் உறுதியான நிலைப்பாட்டை உலகிற்கு எடுத்துரைத்து, அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் இந்தியா-பாகிஸ்தான் இடையேயான பேச்சுவார்த்தை மத்தியஸ்தம் குறித்த கூற்றை மறுத்தார். “மே 9 அன்று அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் பிரதமர் மோடியுடன் பேசினார், ஆனால் டிரம்புடன் எந்த உரையாடலும் நடக்கவில்லை,” என்று ஜெய்சங்கர் தெளிவுபடுத்தினார்.

இந்த விவாதத்தில் எதிர்க்கட்சிகள், குறிப்பாக காங்கிரஸ் உறுப்பினர் கவுரவ் கோகோய், பஹல்காம் தாக்குதலுக்கு மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இந்நிலையில், இன்று பிற்பகலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஆபரேஷன் சிந்தூர் குறித்து மேலும் விளக்கமளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமித் ஷா, நேற்று ஜெய்சங்கரின் உரையை எதிர்க்கட்சிகள் இடையூறு செய்ததற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, “எதிர்க்கட்சிகள் இந்திய வெளியுறவு அமைச்சரை நம்பாமல், வெளிநாட்டு அரசை நம்புகின்றனர். இதனால்தான் அவர்கள் அடுத்த 20 ஆண்டுகளுக்கு எதிர்க்கட்சி பெஞ்சில் இருப்பார்கள்,” என்று கூறினார்.

இந்த விவாதத்தின் தொடர்ச்சியாக, இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடி மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் குறித்து பதிலளிக்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. “ஆபரேஷன் சிந்தூர், இந்தியாவின் பயங்கரவாத எதிர்ப்பு நிலைப்பாட்டை உலகிற்கு தெளிவாக எடுத்துரைத்தது,” என்று மோடி ஏற்கனவே ராஜ்நாத் சிங் மற்றும் ஜெய்சங்கரின் உரைகளை பாராட்டி X தளத்தில் பதிவிட்டிருந்தார். எனவே, இன்று பிரதமர் மோடி விளக்கம் அளித்து பேசுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.