சிறுமி மீது தவறு? சர்ச்சை பேச்சு எதிரொலி.! மயிலாடுதுறை ஆட்சியர் அதிரடி மாற்றம்!
Author
manikandan
Date Published

மயிலாடுதுறை :கடந்த பிப்ரவரி 24-ம் தேதி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியில் செயல்பட்டு வந்த அங்கன்வாடியில் பயின்று வந்த மூன்றரை வயது சிறுமி , அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறாரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். அப்போது அந்த சிறுமி கத்தியதால் சிறுமியை அந்த சிறார் கடுமையாக தாக்கியுள்ளான். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையில், இன்று மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசு சார்பில் குழந்தை வளர்ப்பு பற்றி ஒருநாள் முகாம் நடைபெற்றது. அதில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகா பாரதி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், " அண்மையில் சீர்காழியில் மூன்றறை வயது குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில், குழந்தை தவறாக நடந்து கொண்டது." என சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.
மேலும், " அந்த குழந்தை , பையன் முகத்தில் துப்பி உள்ளது. அதன் காரணமாகவே இந்த சம்பவம் நடந்துள்ளது. இதில், இரண்டு பக்கமும் பார்க்க வேண்டிய இடத்தில் நாம் இருக்கிறோம். குழந்தை வளர்ப்பு சரியாக இருக்க வேண்டும். குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்று பெற்றோர்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும். இரண்டு வயது குழந்தையிடம் சொல்லிக் கொடுப்பது கஷ்டம். அதனால் பெற்றோர்களுக்கு தான் சொல்லிக் கொடுக்க வேண்டும்," என சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார்.
இவரது பேச்சுக்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் வலுத்தது. இதனை அடுத்து தற்போது மயிலாடுதுறை ஆட்சியர் பொறுப்பில் இருந்து அவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக ஈரோடு மாவட்ட ஆணையராக பொறுப்பில் இருந்த எச்.எஸ்.ஸ்ரீகாந்த் , தற்போது புதிய ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த உத்தரவை ஆளுநரின் ஆணைப்படி தலைமை செயலாளர் முருகானந்தம் பிறப்பித்துள்ளார்.