"நான் போட்டியிட்டு இருந்தால் டொனால்ட் டிரம்ப்பை வீழ்த்தியிருப்பேன்"...ஜோ பைடன் பேச்சு!
Author
bala
Date Published

நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்டு டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற்ற நிலையில், வரும் ஜனவரி 20-ஆம் தேதி பதவியேற்கவுள்ளார். இந்த சூழலில், தற்போதைய அதிபராக இருக்கும் ஜோ பைடன் USA Today எனும் அமெரிக்க செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் பேசியபோது "அமெரிக்க அதிபர் தேர்தலில் 2வது முறை போட்டியிட்டிருந்தால் டிரம்பை தோற்கடித்திருப்பேன்" என வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
இந்த அளவுக்கு இவர் உறுதியுடன் இதை கூறியதற்கு காரணமே ஏற்கனவே, ஜோ பைடன் டிரம்ப்பை வீழ்த்தி அதிபராக தேர்வானது தான். அதிபர் ஜோ பைடன் 2020 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்டு, டொனால்ட் டிரம்ப்பை தோற்கடித்தார். 2021 ஆம் ஆண்டு ஜனவரி 20 அன்று அவர் அதிபராக பதவியேற்றார். கமலா ஹாரீஷுக்கு துணை அதிபர் பொறுப்பு வழங்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து கடந்த ஆண்டு நடைபெற்ற அமெரிக்க தேர்தலில் ஜோ பைடன் போட்டியிடவில்லை அவருக்கு பதிலாக கமலா ஹாரீஸ் போட்டியிட்டார். ஆனால், அவரை வீழ்த்தி இந்த முறை டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற்றுவிட்டார். எனவே, இரண்டாவது முறையாக நானே தேர்தலில் போட்டியிட்டுயிருந்தேன் என்றால் நிச்சயமாக வெற்றிபெற்று இருப்பேன் என ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர் " நான் போட்டியிட்டிருந்தால், டொனால்ட் டிரம்ப்பை தோற்கடித்திருப்பேன் என நம்புகிறேன். ஆனால், 86 வயதில் மீண்டும் அதிபராக இருக்க விரும்பவில்லை என்பதால், நான் போட்டியிலிருந்து விலகினேன். எனக்கு 86 வயதாகும் போது என்ன செய்யப்போகிறேன் என யாருக்கும் தெரியாது.
என்னுடைய பதவிக்காலம் விரைவில் முடிவடைகிறது. எனவே, இந்த முடிவில், டிரம்ப்புடன் நான் உரையாடினேன், அரசியல் எதிரிகளை துன்புறுத்த வேண்டாம்..அவர்களை பழிவாங்கவேண்டாம்" என கேட்டுக்கொன்டேன். நான் கேட்டுக்கொண்டதற்கு டிரம்ப் எந்த பதிலும் அளிக்கவில்லை" எனவும் ஜோ பைடன் தெரிவித்தார்.