வணக்கம் சோழ மண்டலம் : "நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க'' - தமிழில் பேசிய பிரதமர் மோடி.!
Author
gowtham
Date Published

அரியலூர் :கங்கை கொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழனின் முப்பெரும் விழா தொடங்கிநடைபெற்று வருகிறது. இதில், பிரதமர் மோடி, ஆளுநர் ரவி, விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி. உள்ளிட்டோர் பங்கேற்றனர். முதலில் பிரதமர் நரேந்திர மோடி, ராஜேந்திர சோழனின் நினைவு நாணயத்தை வெளியிட்டார். பின்னர், இளையராஜாவின் ஆன்மிக இசை நிகழ்ச்சியை கண்டு ரசித்தார்.
இளையராஜாவின் இசை நிகழ்ச்சியை ரசித்த மோடி, சோழ மண்டலத்திற்கு வணக்கம் என தமிழில் தனது பேச்சை தொடங்கினார். பின்னர், நமச்சிவாய வாழ்க, நாதன் தாள் புகழ் என தமிழில் தனது உரையைத் தொடர்ந்ததால் மக்கள் கரகோஷம் எழுப்பினர்.
மேடையில் பேசிய பிரதமர் மோடி, ”வணக்கம் சோழ மண்டலம்” என்று கூறி உரையை தொடங்கிய பிரதமர் மோடி, "நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க.. இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க" எனும் திருவாசக வரியை குறிப்பிட்டுப் பேசினார்.
தொடர்ந்து பேசிய அவர், ''உலகின் வன்முறை, சுற்றுச்சூழல் பிரச்னைக்கு, தீர்வளிக்கும் பாதையை சைவ சித்தாந்தம் நமக்கு காட்டுகிறது. உலகம் வன்முறை போன்ற பிரச்னையில் உழன்று வரும் நேரத்தில், சைவ சித்தாந்தம் நமக்கு தீர்வளிக்கும் பாதையாக உள்ளது. 'அன்பே சிவம்' என்ற திருமூலரின் கோட்பாட்டை உலகம் முழுவதும் கடைபிடித்தால் பெரும்பாலான சங்கடங்கள் தாமாகவே தீர்ந்துவிடும்.
பெருவுடையாரை வணங்க கிடைத்த வாய்ப்பு பெரும் பேறு. 140 கோடி நாட்டு மக்களின் நலனுக்காகவும், நாட்டின் நிரந்தர வளர்ச்சிக்காகவும் சிவனிடம் வேண்டினேன்.. சிவனின் ஆசிகள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும், ஹர ஹர மகா தேவ். சிவ முழக்கத்தை கேட்கும் போது பரவசமாக உள்ளது, இளையராஜாவின் இசையாலும், ஓதுவார்களின் பாடல்களாலும் ஆனந்தமடைந்தேன்'' என்றார்.