தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத்தின் திருவிழா.., கொடியேற்றத்துடன் விமரிசையாக துவங்கியது.!
Author
gowtham
Date Published

தூத்துக்குடி :பனிமய மாதா பேராலயத்தின் 443-வது ஆண்டு திருவிழா நேற்று கொடி பவனியுடன் தொடங்கி, இன்று (ஜூலை 26) கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாக துவங்கியது. இந்த உலகப் புகழ்பெற்ற பேராலயத்தில் ஆண்டுதோறும் ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 6 வரை 11 நாட்கள் திருவிழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில், இன்றுடன் கொடியேற்ற நிகழ்ச்சியைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 3 அன்று நற்கருணை பவனி மற்றும் ஆசீர், ஆகஸ்ட் 4 அன்று மாதா கோவிலைச் சுற்றி சப்பர பவனி, ஆகஸ்ட் 5 அன்று நகர வீதிகளில் மாதா சப்பர பவனி, மற்றும் ஆகஸ்ட் 6 அன்று கொடியிறக்கம் நடைபெறும்.
இந்த திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. இன்றைய தினம் திருவிழா கொடியேற்றத்தில் கலந்துகொள்ள அதிகாலை முதலே பக்தர்கள் கோவிலில் குவிந்து வருகின்றனர். இந்நிலையில், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
'மரியே வாழ்க' என விண்ணை பிளக்க பக்தர்கள் முழக்கமிட்டனர். கோடி கம்பத்தில் பனிமய மாதா ஆலய கொடி கம்பீரமாக ஏற., சமாதானச் சின்னமாக வெள்ளைப் புறாக்கள் வட்டமடித்தது. கொடியேற்றத்தைத் தொடர்ந்து, பனிமய மாதா சொரூபத்துக்கு பொன் மகுடம் மற்றும் ஆபரணங்கள் அணிவிக்கப்படுகின்றன.
விழாவின் 10-வது நாள் அன்னையின் திருவுருவ சப்பர பவனி வெகு விமரிசையாக நடைபெறுகிறது, இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்கின்றனர். இதற்காக, மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சியும் போக்குவரத்து, பாதுகாப்பு, சுகாதாரம், குடிநீர் உள்ளிட்ட வசதிகளை ஏற்பாடு செய்துள்ளன.