ரசிகர்களுக்கு 'பிளையிங் கிஸ்' கொடுத்த அஜித்! பரபரக்கும் துபாய் ரேஸ் களம்...
Author
manikandan
Date Published

துபாய் :நடிகர் அஜித்குமார் சினிமாவை தாண்டி ரேஸிங்கில் அதீத ஆர்வம் கொண்டவர். 2000த்தின் தொடக்கத்தில் ரேஸிங்கில் கலந்து கொண்ட அஜித், அதன் பிறகு சினிமா வாழ்வில் பிஸியான பிறகு தற்போது அதற்கென நேரத்தை ஒதுக்கி துபாயில் நடைபெறும் கார் ரேஸிங்கில் பங்கேற்று வருகிறார்.
24H கார் ரேஸிங்கில் அஜித்குமார் ரேஸிங் அணி பங்கேற்று வருகிறது. இதில் நேற்று அஜித்குமார் அணி முதல் தகுதி சுற்றில் 7வது இடம் பிடித்து அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர். இன்று 2வது தகுதி சுற்று நடைபெறுகிறது. நாளை கோப்பைக்கான இறுதி சுற்று போட்டி நடைபெற உள்ளது.
இன்றுஅடுத்த தகுதி சுற்று போட்டி நடைபெறுகிறது. அதற்கு முன்னர் அங்கு பேட்டியளித்த அஜித்குமார் தனது ரசிகர்கள் பற்றியும், அடுத்தடுத்த சினிமா அப்டேட்களை பகிர்ந்து கொண்டார். அவர் கூறுகையில், "இந்த கார் பந்தயத்தை காண என் ரசிகர்கள் இவ்வளவு பேர் இங்கு வருவார்கள் என எதிர்பார்க்கவில்லை. அவர் மீது நான் வைத்துள்ள அன்பு அளவு கடந்தது" என தெரிவித்தார்.
மேலும், "நான் 2 படங்கள் நடித்து முடித்துள்ளேன். ஒரு படம் ஜனவரியில் ரிலீசாக உள்ளது. இன்னொரு படம் ஏப்ரல் அல்லது மே மாதம் ரிலீசாகிறது. எனக்கு ஒரே நேரத்தில் பல்வேறு வேலைகளை செய்வதில் விருப்பம் இல்லை . அதனால் ஒரு நேரத்தில் ஒரு துறையில் மட்டும் கவனம் செலுத்துவேன்." எனக் கூறினார். அப்போது பார்வையாளர் அரங்கில் இருந்த ரசிகர்கள் அஜித்தை பார்த்து கரகோஷமிட, அதனை கவனித்த அஜித், தனது ரசிகர்களுக்கு பிளையிங் கிஸ் கொடுத்தார்.
அஜித்குமார் நடிப்பில் தயாராகியுள்ள விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் ரிலீசாக வெளியாக இருந்தது. ஆனால், பல்வேறு காரணங்களால் அப்பட ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டு இன்னும் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவில்லை. அஜித் நடிப்பில் உருவாகியுள்ள இன்னொரு படமான குட் பேட் அக்லி திரைப்படம் ஏப்ரல் 10இல் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.