பிள்ளைகளை தேனிலவுக்கு இவ்வளவு தூரம் அனுப்ப வேண்டுமா? -ம.பி. முதலமைச்சர் மோகன் யாதவ்
Author
bala
Date Published

மேகாலயா :இந்திய முழுவதும் கடந்த சில நாட்களாகவே அதிர்வலைகளை ஏற்படுத்தி பேசப்படும் ஒரு சம்பவம் மத்தியப் பிரதேசத்தின் இந்தூரைச் சேர்ந்த ராஜா ரகுவன்ஷி (28) என்ற இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கு. இவர் தனது மனைவி சோனம் ரகுவன்ஷியுடன் (24) தேனிலவுக்காக மேகாலயாவுக்கு சென்றபோது கொலை செய்யப்பட்டார்.
ராஜாவும் சோனமும் மே 11, 2025 அன்று திருமணம் செய்து, மே 20 அன்று மேகாலயாவுக்கு தேனிலவு சென்றனர். மே 23 அன்று, சோஹ்ரா (செர்ராபுஞ்சி) பகுதியில் உள்ள வெய்சாவ்டாங் நீர்வீழ்ச்சி அருகே இருவரும் மாயமானார்கள். ஜூன் 2 அன்று, ராஜாவின் உடல் 100 அடி ஆழமான பள்ளத்தாக்கில் கண்டுபிடிக்கப்பட்டது. அவரது தலையில் கூர்மையான ஆயுதத்தால் ஏற்பட்ட காயங்கள் மரணத்திற்கு காரணம் என்று தெரியவந்தது.
முதற்கட்டமாக சோனம், முதலில் மாயமானவர், பின்னர் ஜூன் 9 அன்று உத்தரப் பிரதேசத்தின் காசிபூரில் ஒரு உணவகத்தில் கைது செய்யப்பட்டார். அதன்பிறகு அவரது காதலன் என்று கூறப்படும் ராஜ் குஷ்வாஹா உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல்துறையின் விசாரணையில், சோனம் தனது கணவர் ராஜாவைக் கொல்ல திட்டமிட்டு, மூன்று கூலிப்படையினரை தயார் செய்து சம்பவத்தில் ஈடுபட்டது. தெரியவந்துள்ளது. தற்போது, மேகாலயா காவல்துறை இந்தக் கொலையை முழுமையாக விசாரித்து வருகிறது.
எனவே, இந்த கொலை வழக்கு பேசுபொருளாக மாறியுள்ள நிலையில் அரசியல் தலைவர்கள் பலரும் இந்த சம்பவம் குறித்து தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் மத்திய பிரேதம் முதல்வர் மோகன் யாதவ் பிள்ளைகளை தேனிலவுக்கு இவ்வளவு தூரம் அனுப்ப வேண்டும்தானா என பெற்றோர் யோசிக்க வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர் " இது சமூகத்திற்கு ஒரு பாடம். திருமணம் என வரும்போது எல்லா விஷயங்களையும் நுணுக்கமாக கவனிக்க வேண்டும். பிள்ளைகளை தேனிலவுக்கு இவ்வளவு தூரம் அனுப்ப வேண்டுமா என்றும் பெற்றோர் யோசிக்க வேண்டும்.” அதே சமயம் அவர் இந்த சம்பவத்தை சமூகத்திற்கு ஒரு எச்சரிக்கையாகக் குறிப்பிட்டு, திருமணம் மற்றும் பயணங்கள் போன்ற முக்கிய முடிவுகளில் பெற்றோரும் குடும்பத்தினரும் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.