Payload Logo
தமிழ்நாடு

"சங்கிகளின் மகிழ்ச்சிக்காக பேசுகிறார் இபிஎஸ்" - எடப்பாடி பழனிசாமிக்கு சேகர்பாபு பதில்.!

Author

gowtham

Date Published

Sekar Babu Press Meet

சென்னை :கோவையில் தனது பிரச்சாரத்தின் போது அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, ''கோவில் நிதியில் இருந்து கல்லூரி கட்டுகிறார்களாம். கோவிலின் முன்னேற்றத்திற்காக பொதுமக்களாகிய நீங்கள் நிதி கொடுத்தால், அதை வைத்து, இவர்கள் சம்பாதிப்பதற்காக கல்லூரிகள் அமைக்கிறார்களாம். ஏன் அரசாங்க நிதியை வைத்து கட்ட முடியாதா?  என்று கேள்வி எழுப்பியிருந்தார். எடப்பாடி பழனிசாமிக்கு பதிலளிக்கும் வகையில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் சேகர்பாபு, “இந்து சமய அறநிலையத்துறை சட்டத்தின்படி கோயில்கள் நிதியில் கல்வி நிறுவனங்கள் தொடங்கலாம். கேரளா, ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் கோயில் நிதியில் கல்லூரிகள் இயங்குகின்றன. அறநிலையத் துறை சட்ட விதிகளில் உள்ளதுபோலத்தான் கல்வி நிறுவனங்களை தொடங்கியுள்ளோம். திமுக ஆட்சியில் அரசு சார்பில் 41 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டது, 19 திருக்கோயில்களில் மருத்துவமனைகளை தொடங்கி உள்ளோம் சோழர் காலத்தில்கூட கல்விச் சாலை இருந்ததாக கல்வெட்டுகள் கூறுகின்றன. உணவு, கல்வி, மருத்துவத்திற்கு அதிக கவனம் செலுத்தி பல்வேறு திட்டங்களை திமுக அரசு செயல்படுத்தி வருகிறது. 1000 ஆண்டுகளுக்கு முன்பே கோயில்களில் கல்விச்சாலையும், மருத்துவ சாலையும் மன்னர்களால் கொண்டுவரப்பட்டுள்ளது. கல்லூரி, பல்கலைக்கழகம் கோயில் கட்டடக்கலையை கொண்டு கட்டிக்கொள்ளலாம் என சட்டத்தில் இடம் உள்ளது. திருக்கோயில்கள் சார்பில், 25 பள்ளிகள், 1 பாலிடெக்னிக் கல்லூரி, 9 கலை அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இதில் 22,455 மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர். அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களே அறநிலையத்துறை சார்பில் கல்வி நிலையங்கள் வேண்டும் என கோரிக்கை வைத்தனர். ஆந்திராவில் 7, கேரளாவில் 3 கல்லூரிகள் கோயில்கள் சார்பில் நடத்தப்படுகின்றன. MGR, ஜெயலலிதா ஆட்சி காலத்திலும் அறநிலையத்துறை சார்பில் கல்லூரிகள் திறக்கப்பட்டன, இதுவும் சதிச் செயலா? அதிமுக தலைவர்களை இபிஎஸ் ஏற்கவில்லை என தெளிவாகத் தெரிகிறது. பாஜக எனும் மலைப்பாம்பு அதிமுகவை சிறுக சிறுக விழுங்கி வருகிறது. பாஜகவின் ஊதுகுழலாக இருந்து பழனிசாமி பேசுகிறார். திட்டமிட்டு விஷ விதைகளை பரப்புகிறார். சங்க பரிவாரங்கள் மகிழ்ச்சி அடைய வேண்டும் என பழனிசாமி பேசுகிறார்'' என்று விமர்சனம் செய்துள்ளார்.