விமான விபத்து : ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்த பரிதாபம்!
Author
bala
Date Published

குஜராத் :அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து லண்டன் காட்விக் விமான நிலையத்திற்கு புறப்பட்டAir Indiaவிமானம்AI171, புறப்படுதலுக்கு சில நிமிடங்களில் மேகனிநகர் குடியிருப்பு பகுதியில் விபத்துக்குள்ளானது. இந்த பயங்கர விபத்தில் 242 பயணிகள் மற்றும் 12 பணியாளர்கள் உட்பட மொத்தம் 254 பேரில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இந்திய அரசு மற்றும் விமான நிறுவன அதிகாரிகள் உறுதிப்படுத்தியபடி, 204 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன, மேலும் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. ஆனால் இந்த பயங்கர விபத்தில், அதிர்ஷ்டவசமாக விஸ்வாஸ் மிகுமார் என்ற ஒரே ஒரு பயணி மட்டுமே உயிர் தப்பியிருந்தார்.
அதே சமயம், இந்த விபத்து சம்பவத்தில் பன்ஸ்வாராவைச் சேர்ந்த மருத்துவர்கள் பிரதீக் ஜோஷி மற்றும் காமினி ஜோஷி ஆகியோர் மற்றும் அவர்களுடைய மூன்று குழந்தைகளும் உயிரிழந்த சம்பவம் பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. இருவரும் தங்களுடைய குழந்தைகளான மிரயா, நகுல், பிரத்யுத் ஆகியோருடன் லண்டனுக்கு பயணித்தபோது, விமானம் விபத்துக்குள்ளானது.
உதய்ப்பூரில் பணியாற்றிய இந்த குடும்பம், புதிய வாழ்க்கைக்காக இங்கிலாந்து சென்று கொண்டிருந்தது. எனவே, அவர்களுடைய கனவை சாம்பலாக்கும் வகையில் இந்த துயரச் சம்பவம் நடந்துள்ளது பலருடைய மனதையும் உலுக்கியுள்ளது. இந்த சம்பவம் பன்ஸ்வாராவையும் உதய்ப்பூரையும் ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதற்கிடையில், இந்தியா விமான விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி வழங்கப்படும் என டாடா குழுமம் அறிவித்துள்ளது. அதைப்போல, காயமடைந்தோரின் மருத்துவ செலவுகளை ஏற்பதாகவும், சேதமான மருத்துவக் கல்லூரி விடுதி கட்டித் தரப்படும் எனவும் அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.