ஹனிமூன் கொலை : "என்னோட தங்கைக்கு தூக்கு தண்டனை கொடுங்க"...அண்ணன் ஆதங்கம்!
Author
bala
Date Published

மேகாலயா :இந்திய முழுவதும் கடந்த சில நாட்களாகவே அதிர்வலைகளை ஏற்படுத்தி பேசப்படும் ஒரு சம்பவம் மத்தியப் பிரதேசத்தின் இந்தூரைச் சேர்ந்த ராஜா ரகுவன்ஷி (28) என்ற இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கு தான். ராஜாவும் சோனமும் மே 11, 2025 அன்று திருமணம் செய்து, மே 20 அன்று மேகாலயாவுக்கு தேனிலவு சென்றனர். மே 23 அன்று, சோஹ்ரா (செர்ராபுஞ்சி) பகுதியில் உள்ள வெய்சாவ்டாங் நீர்வீழ்ச்சி அருகே இருவரும் மாயமானார்கள். ஜூன் 2 அன்று, ராஜாவின் உடல் 100 அடி ஆழமான பள்ளத்தாக்கில் கண்டுபிடிக்கப்பட்டது. அவரது தலையில் கூர்மையான ஆயுதத்தால் ஏற்பட்ட காயங்கள் மரணத்திற்கு காரணம் என்று தெரியவந்தது.
முதற்கட்டமாக சோனம், முதலில் மாயமானவர், பின்னர் ஜூன் 9 அன்று உத்தரப் பிரதேசத்தின் காசிபூரில் ஒரு உணவகத்தில் கைது செய்யப்பட்டார். அதன்பிறகு அவரது காதலன் என்று கூறப்படும் ராஜ் குஷ்வாஹா உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல்துறையின் விசாரணையில், சோனம் தனது கணவர் ராஜாவைக் கொல்ல திட்டமிட்டு, மூன்று கூலிப்படையினரை தயார் செய்து சம்பவத்தில் ஈடுபட்டது. தெரியவந்துள்ளது. தற்போது, மேகாலயா காவல்துறை இந்தக் கொலையை முழுமையாக விசாரித்து வருகிறது.
இப்படியான பரபரப்பான சூழலில், சோனத்தின் சகோதரர் கோவிந்த் ஊடகம் ஒன்றுக்கு வேதனையுடன் அளித்த பேட்டியில் பேசும்போது "தன்னுடைய தங்கை குற்றவாளி என உறுதி ஆனது என்றால் தூக்குத்தண்டனை கொடுக்கவேண்டும்" என ஆதங்கத்துடன் பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் " சோனம் கொலைக்கு பின்னால் இருப்பது உறுதியாகவில்லை, ஆனால் வெளிவந்த ஆதாரங்கள் அவள் இதைச் செய்ததை 100% உறுதிப்படுத்துகின்றன.
என் குடும்பம் சோனத்துடனான அனைத்து உறவுகளையும் முறிந்துவிட்டது. இனிமேல் எங்களுக்கும் அவளுக்கு எந்த சம்பந்தமும் இல்லை. இந்த வழக்கில் சோனம் குற்றவாளி என்றால், கண்டிப்பாக அவளுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட வேண்டும். அதே சமயம் இந்த சமூகமும் அவளை ஒதுக்கி வைக்கும்" எனவும் தெரிவித்தார்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர் " குஷ்வாஹா (காதலன் என கூறப்படும்) சோனத்தை மூத்த சகோதரி என்பது போல பழகி வந்தார்கள், கடந்த மூன்று ஆண்டுகளாக அவருக்கு ராக்கி கட்டி வந்தார். எப்போதுமே நாங்கள் ஒன்றாக அமர்ந்து இருப்போம் சோனம் எங்கள் இருவருக்கும் ராக்கி கட்டுவார். அவர்களுக்கு இடையே காதல் உறவு இருப்பது குஷ்வாஹாவின் தாய்க்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை" எனவும் தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து " சோனம் திருமணத்துக்கு முன்பு மகிழ்ச்சியாக தான் இருந்தார், கடந்த இரண்டு மாதங்கள் திருமண ஷாப்பிங் செய்தார். அவள் திருமணத்துக்கு எதிராக இருந்ததாகவும், குடும்பம் பொறுப்பு என்று கூறியதாகவும் வெளியான தகவல்களை மறுக்கிறேன். அப்படியெல்லாம் எதுவுமே இல்லை. இந்த நேரத்தில் நான் ராஜாவின் குடும்பத்திடம் எப்படி மன்னிப்பு கேட்பேன் என்று தெரியவில்லை. ஏற்கனவே நான் ராஜாவின் குடும்பத்திடம் மன்னிப்பு கேட்டேன்" எனவும் அழுது கொண்டே பேசினார்.