மிஸ் பண்ணாதீங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகை விடுபட்டவர்கள் நாளை முதல் விண்ணப்பிக்கலாம்!
Author
bala
Date Published

சென்னை :தமிழ்நாடு அரசு 2023-ஆம் ஆண்டு முதல் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை (கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்) செயல்படுத்தி வருகிறது. இதுவரை 1.15 கோடி பெண்கள் இந்தத் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1,000 பெறுகின்றனர். இந்தத் தொகை அவர்களின் வங்கிக் கணக்குகளில் நேரடியாகச் செலுத்தப்படுகிறது, இதனால் நிதி விநியோகத்தில் வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்படுகிறது. இந்தத் திட்டம் பெண்களுக்கு நிதி சுதந்திரத்தை அளிப்பதோடு, அவர்களின் குடும்ப செலவுகளை சமாளிக்கவும் உதவுகிறது.
மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் இதுவரை 1.15 கோடி பெண்கள் பயனடைந்தாலும், இன்னும் தகுதியுள்ள சில பெண்கள் இந்தத் திட்டத்தில் இணையவில்லை. இதற்கு பல காரணங்கள் இருக்கலாம் . குறிப்பாக விண்ணப்பம் பூர்த்தி செய்யாதது, ஆவணங்கள் இல்லாதது, அல்லது தகவல் பற்றாக்குறை போன்றவை இருக்கலாம். எனவே, இன்னும் விண்ணப்பம் செய்யாமல் இருக்கும் பெண்களுக்கு மீண்டும் இந்த திட்டத்தில் இணைக்கு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.
அதன்படி, விடுபட்ட மகளிர்களை இந்தத் திட்டத்தில் இணைப்பதற்காக, தமிழ்நாடு அரசு மாநிலம் முழுவதும் ஜூன் 4-ஆம் தேதி 9,000 முகாம்களை , நடத்தத் திட்டமிட்டுள்ளது. இந்த முகாம்களில், தகுதியுள்ள பெண்கள் தங்கள் விண்ணப்பங்களை எளிதாகப் பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் (அடையாள அட்டை, வங்கிக் கணக்கு விவரங்கள், மற்றும் குடும்ப அட்டை போன்றவை) முகாம்களில் சரிபார்க்கப்படும். இந்த முகாம்கள் இலவசமாக நடத்தப்படுவதால், எந்தவொரு கட்டணமும் செலுத்தத் தேவையில்லை. விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு ஏற்கப்பட்டால், ஜூலை 2025 முதல் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் மாதந்தோறும் ரூ.1,000 வரவு வைக்கப்படும்.
தமிழ்நாடு அரசு, “உடனே முந்துங்கள்” என்று இந்த திட்டத்திற்கு அழைப்பு விடுத்து, தகுதியுள்ள அனைத்து பெண்களையும் இந்த முகாம்களில் பங்கேற்குமாறு ஊக்குவிக்கிறது. இந்த முகாம்கள் ஒரு தனித்துவமான வாய்ப்பாகும், ஏனெனில் இதன் மூலம் தகுதியுள்ளவர்கள் தவறவிடப்பட்ட வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். எனவே, இன்னும் விண்ணப்பம் செய்யாமல் இருக்கும் மகளிர் நாளை முகாம்களுக்கு சென்று இந்த திட்டத்திற்கு விண்ணப்பம் செய்துகொள்ளலாம்.