பெங்களூரு கூட்ட நெரிசல் : திருப்பூரை சேர்ந்த பெண் உயிரிழப்பு!
Author
bala
Date Published

பெங்களூர் :பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணியின் ஐபிஎல் 2025 வெற்றி விழாவில் ஏற்பட்ட பயங்கர கூட்ட நெரிசலில், திருப்பூரை சேர்ந்த 25 வயது காமாட்சி உயிரிழந்தார். இந்த துயரத்தில் 11 பேர் உயிரிழந்தனர், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர். 18 ஆண்டு காத்திருப்புக்குப் பிறகு ஆர்சிபி முதல் முறையாக ஐபிஎல் கோப்பையை வென்ற மகிழ்ச்சியைக் கொண்டாட லட்சக்கணக்கான ரசிகர்கள் கூடியதால் இந்த அவலம் நிகழ்ந்தது.
இந்த சம்பவம் கிரிக்கெட் உலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த 11 பேரில் ஒருவர் தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 25 வயது காமாட்சி என்கிற தகவலும் வெளியாகி இருக்கிறது. உயிரிழந்த இவர் திருப்பூரை சேர்ந்தவர் என்றாலும் பெங்களூரில் தனியார் நிறுவனத்தில் தொழில்நுட்ப வல்லுநராக பணியாற்றி வந்துள்ளார். பெங்களூர் மீது அதிகம் அன்பு கொண்ட இவர் அணியின் வரலாற்று வெற்றியைக் கொண்டாடுவதற்காக சின்னசாமி மைதானத்தில் நடந்த பேரணியில் கலந்துகொண்டார்.
பெங்களூர் கோப்பையை வென்றதை கொண்டாட சென்ற அவர் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் காமாட்சி குடும்பத்தினரையும், நண்பர்களையும் ஆழ்ந்த துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் திருப்பூர் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.தேவியின் உயிரிழப்பு, இந்த வெற்றிக் கொண்டாட்டத்தின் மகிழ்ச்சியை மறைத்து, பொது நிகழ்ச்சிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளின் முக்கியத்துவத்தை மீண்டும் உணர்த்தியுள்ளது.
மேலும், கர்நாடக மாநில அரசு இந்த சம்பவம் குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது, மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு மற்றும் காயமடைந்தவர்களுக்கு இலவச சிகிச்சை வழங்கப்படும் என அறிவித்துள்ளது. ஆர்சிபி அணி நிர்வாகமும் இந்த துயரத்திற்கு இரங்கல் தெரிவித்து, உள்ளூர் நிர்வாகத்துடன் இணைந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய உறுதியளித்துள்ளது.