அகமதாபாத் : குடியிருப்புப் பகுதியில் ஏர் இந்தியா விமானம் விழுந்து விபத்து!
Author
bala
Date Published

அகமதாபாத் :குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் நகரில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் பன்னாட்டு விமான நிலையத்திற்கு அருகிலுள்ள மேகனிநகர் பகுதியில் விமான விபத்து நடந்துள்ளது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எயர் இந்தியா விமானம் ஒன்று அகமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து லண்டனுக்கு புறப்பட்ட சிறிது நேரத்தில் விபத்துக்குள்ளானது.
விமானம் புறப்பட்ட உடனேயே, டேக்-ஆஃப் செய்யும் போது ஒரு வெடிப்பு ஏற்பட்டதாகவும், அதனால் விமானம் மேகனிநகர் பகுதியில், குறிப்பாக கோடா கேம்ப், ஐ.ஜி.பி. காம்பவுண்ட் அருகே குடியிருப்பு பகுதியில் விழுந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விமானம் விமான நிலையத்தின் அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் விழுந்ததாகவும், இதனால் புகை வெளியேறுவதும் சம்பவம் தொடர்பாக பரவி வரும் வீடியோ காட்சிகளை வைத்து பார்க்கையில் தெரிகிறது.
மேலும், இதில் கூடுதல் அதிர்ச்சியை கொடுக்கும் செய்தி என்வென்றால், விபத்துக்குள்ளான அந்த விமானத்தில் 130 முதல் 200க்கும் அதிகமான பயணிகள் வரை இருந்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. ஆனால் இது அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.
அதே சமயம், இந்த விபத்து குறித்து அதிகாரப்பூர்வமான உயிரிழப்பு தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. அவசரகால சேவைகள், தீயணைப்பு படைகள் மற்றும் மீட்பு குழுக்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், பாதிக்கப்பட்ட பகுதியில் புகை தூசி தொலைவில் இருந்து காணப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விபத்து நடந்தபோது அகமதாபாத் விமான நிலையம் முழு செயல்பாட்டில் இருந்ததாகவும், ஆனால் முன்னெச்சரிக்கையாக கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விரைவில் விமானத்தில் பயணம் செய்தவர்கள் எவ்வளவு பேர் இறப்பு எதுவும் ஏற்பட்டிருக்கிறது என்பதற்கான விவரமும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
unknown node